0 Comments
Published on: Monday, November 9th, 2020 at 10:13 AM
தீபாவளி பலகாரம் – மிருதுவான சீடை செய்வது எப்படி? – How to make diwali seedai
இனிப்பு வகைகள், பலகாரங்கள் இல்லாமல் தீபாவளியே இருக்காது. மகிழ்ச்சிக்கான அடையாளங்களில் ஒன்று இனிப்பு. ஏனென்றால், பல நூற்றாண்டுகளாக விழாக்களை எப்போதும் நாம் ஸ்வீட் எடுத்துதான் கொண்டாடி வருகிறோம். அந்த வகையில் தீபாவளி பலகாரங்கள் பட்டியலில் முக்கிய இடம் பிடிப்பது சீடை. நீங்கள் செய்வது எஜமான் படத்தில் ரஜினியின் பல்லை உடைக்கும் சீடை போல் இல்லாமல், மிருதுவாக எப்படி செய்வது என பார்க்கலாம்…
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1 1/2 கப்
தேங்காய் துருவல் – அரை கப்
வெல்லம் – 1 கப்
கருப்பு மற்றும் வெள்ளை எள் – அரை கப்
நெய் – 2 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
பச்சரிசியை 2 முதல் 3 மணி நேரம் வரை நன்கு ஊற வைக்க வேண்டும். பின்னர், தண்ணீரை நன்றாக வடித்துவிட்டு, மிக்சியில் போட்டு மைய மாவு பதத்தில் அரைக்கவும். இந்த மாவை ஜல்லடையில் சலித்துக் கொள்ளவும். இதனால், உதிரி மாவுகளை தவிர்க்கலாம்.
அடுத்ததாக, வெல்லத்தை கடாயில் வைத்து காய்ச்சவும். வெல்லம் உருகுவதற்கு ஒரு கரண்டி தண்ணீர் ஊற்றுவது போதுமானது. கெட்டி பதத்திற்கு உருக வைக்காமல், கட்டிகளின்றி முற்றிலும் உருகிவிட்டாலே இறக்கிவிடவும். இதையடுத்து, கடாயில் எள்ளை வறுத்துக் கொள்ளவும். எள்ளை மாவில் கலந்துவிட்டு, அடுத்ததாக, உருக்கிய வெல்லத்தை ஊற்றி மாவை நன்கு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அத்துடன் துருவிய தேங்காயையும் போட்டுக் கலக்கவும்.
ஒரு வேளை மாவில் தண்ணீர் அதிகமாக தெரிவிது போல் இருந்தால், வெள்ளை வேட்டியில் மாவை சுற்றி வைத்து, அரை மணி நேரம் கழித்து எடுத்தால் தண்ணீர் வற்றிவிடும். சீடை இன்னும் சிறப்பாக வரவேண்டும் என்றால், சீடை சுடுவதற்கு ஒரு நாளுக்கு முன்பே மாவை பிசைந்து வைத்து, மறுநாள் சுட்டால் மிகவும் மிருதுவாக இருக்கும்.
பிசைந்த மாவை கோலி அளவில் உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். மாவு கையில் ஒட்டாமல் இருக்க நெய் தொட்டுக் கொள்ளவும். அடுத்ததாக, எண்ணெய்யை கடாயில் ஊற்றி நன்கு காய்ந்த பின், உருண்டைகளை போட்டு நன்கு வறுத்து எடுக்கவும். பொன்னிறமாக வந்துவிட்டதே என உடனே எடுக்க வேண்டாம். உள்ளுக்குள் மாவு வேகாமல் இருக்கும். எனவே அடுப்பை குறைத்து வைத்து நன்கு வறுத்தெடுக்கவும்.
வறுக்கும்போது சில நேரங்களில் உருண்டைகள் வெடிக்கலாம். எனவே பாதுகாப்புடன் கையாளுங்கள். பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடுங்கள்..!
No comments yet