0 Comments
Published on: Saturday, August 15th, 2020 at 10:47 AM
மனதில் குழப்பமா? இதை செய்தால் போதும்… அனைத்தும் பறந்து போகும்..!
சில சமயத்தில் மனம் மிகுந்த குழப்பத்தில் இருக்கும். எந்த முடிவை சரியாக தேர்ந்தெடுப்பது? என்று நமக்குக் தெரியாமல் புலம்பிக் கொண்டிருப்போம். நாம் செய்வது சரி தானா? இல்லை இதை செய்தால் ஏதாவது பிரச்சனை ஏற்படுமா? என்று ஒரு விஷயத்தைப் பற்றி ஆயிரம் முறை சிந்தித்துக் கொண்டிருப்போம்.
நாம் அதிகம் நம்பியிருந்த ஒரு விஷயம், நம்மை செவிட்டில் அறைந்தது போல் ‘நம்பிய நீதான் முட்டாள்’ என்று பாடம் கற்பிக்கும் பொழுது, மனம் தானாகவே சஞ்சலப்படும். அதிலிருந்து மீண்டு வருவது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும். அந்த சமயத்தில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் உணர்ந்து கொள்ளப் போகிறீர்கள்.
ஒரு குட்டி கதை மூலம் உங்களது குழம்பிய மனதை சில நிமிடத்தில் எப்படி தெளிய வைப்பது என்று பாருங்கள். புத்தர் நாம் அனைவரும் அறிந்த மனித கடவுள். அவர் தன் சீடர்களுடன் ஒரு முறை பயணம் சென்று கொண்டிருக்கும் பொழுது, மிகுந்த களைப்பு ஏற்பட்டது. அதனால் அங்கிருந்த ஆலமர நிழலில் இளைப்பாறுவதற்கு சற்று அமர்ந்தார்கள். அந்த இடத்திற்கு அருகில் ஏரி ஒன்று இருந்தது. புத்தர், சீடர்களில் ஒருவரை அனுப்பி தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்.
சீடரும் தங்களிடமிருந்த மண் பானை ஒன்றை எடுத்து கொண்டு ஏரியில் தண்ணீர் பிடிப்பதற்கு ஆயத்தமானார். ஆனால் ஏரியோ குடிப்பதற்கு உகந்த தண்ணீரை கொண்டிருக்கவில்லை. அப்போது தான் ஏரியை கடந்து கொண்டிருந்தது ஒரு மாட்டு வண்டி. அதைப் பார்த்த அந்த சீடன், ’அடடே… மாட்டு வண்டி ஏரியை கடந்து சென்றதால் ஏரி கலங்கி விட்டது போலும்’ என்று நினைத்துக் கொண்டான்.
ஏரி கலங்கியதால் அடியிலிருக்கும் சேறும் சகதியும் மேலெழும்பி நீரை அசுத்தப்படுத்தி விட்டது. இதனால் இப்போது தண்ணீர் குடிப்பதற்கு பிரயோஜம் இல்லாமல் போய்விட்டது. இதை எண்ணி வருத்தப்பட்டு கொண்டே சீடர் புத்தரிடம் தண்ணீர் கொண்டு போகாமல் வெறும் கையோடு சென்று நடந்தவற்றையெல்லாம் கூறினான்.
இதைக்கேட்ட புத்தர் மெல்லிய சிரிப்புடன் அமைதியாக இருந்தார். சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி அந்த சீடனை ஏரிக்கு அனுப்பினார். சீடன் இப்போது சென்று பார்த்த பொழுது ஏரி மிகவும் தெளிவாக எந்த வித சலனமும் இல்லாமல் தூய்மையாக இருந்தது. பானையில் தண்ணீர் முகந்து கொண்டு ஆலமரத்திற்கு திரும்பி சென்றான் அந்த சீடன்.
தண்ணீரைப் பார்த்த புத்தர், சீடரிடம் ஒரு கேள்வி கேட்டார். ‘இப்போது தண்ணீர் சுத்தமாக இருக்கிறது அல்லவா? அதற்காக நீ என்ன செய்தாய்?’ என்றார். அதற்கு சீடன், ’குருவே நன் எதையும் செய்யவில்லை. அதை அப்படியே விட்டு வந்து விட்டேன்’ என்று பதிலளித்தான்.
’நீ எதுவும் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டு வந்து விட்டாய் அல்லவா? அது தானாகவே தெளிந்து விட்டது அப்படித்தானே?’ என்று கேட்டார். அதற்கு சீடனும், ‘ஆமாம் குருவே’ என்று பதில் அளித்தான். நம் மனமும் இதேபோல் தான். நாம் அதிக குழப்பத்தில் இருக்கும் பொழுது எதையாவது செய்ய வேண்டும் என்பதில்லை. எதுவும் செய்யாமல் அப்படியே விட்டுவிட வேண்டும். அது தானாகவே சரியாகிவிடும்.
அந்த சமயத்தில் முதலில் எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தான் ஒழிக்க வேண்டும். ஒன்றும் செய்யாமல் கொஞ்ச நாட்கள் வரை அதற்கு அவகாசம் கொடுத்தால் அது தானாகவே தன்னிச்சையாக அமைதியாகி விடும். நம்முடைய உதவி இல்லாமல் நம் மனமானது இயல்பாகவே நீங்கள் கொடுத்த அவகாசத்தை எளிதாக பயன்படுத்தி வென்று காட்டிவிடும் என்றார் புத்தர்.
என்ன சரிதானே? அவ்வளவு தாங்க, நம் மனம் எப்பொழுதெல்லாம் குழப்பத்தில் இருக்கிறதோ அப்போதெல்லாம் நீங்கள் எதுவும் செய்யாமல் அமைதியாக இருப்பது ஒன்றே உங்களுக்கு நன்மை செய்யும் தீர்வாக இருக்கும். எதையாவது செய்யப்போய் மேலும் அதிக துன்பத்தை அனுபவிப்பதை விட, எதையும் செய்யாமல் அமைதியாக இருந்து உங்கள் மனதையும், உங்கள் எதிரிகளையும் வென்று காட்டுவதுதான் புத்திசாலித்தனம், என்பதைக் கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.
No comments yet